Wednesday, January 6, 2010

அனுதின மன்னா ஜனவரி 06

யாரை பற்றி கொண்டிருக்கிறாய் ?

உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர் - ஏசாயா 26:3


ஒரு வாலிபன் தன் தேசத்தில் இருந்த உயரமான மலையின் மேல் ஏற ஆர்வம் கொண்டான். அதற்காக பல மாதங்கள் பயிற்சி செய்து, தனக்கு மட்டுமே புகழ் வர வேண்டும் என்பதற்காக தனியாக மேலே ஏறுவதற்கு புறப்பட்டான். மலையின் மேலே ஏற ஆரம்பித்தான். உற்சாகமாக ஆரம்பித்ததால் நேரம்போவது தெரியாமல் மேலே ஏறிக் கொண்டே இருந்தான். அதற்குள் இருட்ட ஆரம்பித்தது. அவன் எங்கும் போய் தங்குவதற்கு ஆயத்தம் செய்யாததால், எப்படியும் மேலே போய் விடுவோம் என்று எண்ணத்தோடு இன்னும் அதிகமான வேகத்துடன் மேலே போக ஆரம்பித்தான். ஆதற்குள் நன்கு இருட்டி விட்டது. கண்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை.


சிகரத்தை எட்டுவதற்கு 100 மீட்டர் இருக்கும்போது, கால் இடறி கீழே விழ ஆரம்பித்தான். எங்கும் காரிருள். எங்கு போய்க் கொண்டிருக்கிறோம் என்று தெரியாத நிலை. புவி ஈர்ப்பின் காரணமாக மிக வேகமாக கீழே போய்க் கொண்டிருந்தான். கீழே போகும்போது தான் எப்படியும் மரிக்க போகிறோம் என்று தெரிந்து விட்டது. அப்படி அவன் நினைத்துக் கொணடிருக்கும்போது ஒரு இழுப்பு. மலையின் உச்சியிலிருந்து அவன் இடுப்பில் கட்டியிருந்த கயிறு முடிந்து அவனை அந்தரத்தில் தொங்க வைத்தது. இப்போது அவனுக்கு என்னசெய்வது என்று தெரியவில்லை. அவனுக்கு இருந்த ஒரே வழி கர்த்தர் மாத்திமே. வேறு வழி இல்லாமல், தன்னால் இயன்ற வரை சத்தமாக 'கர்த்தாவே எனக்கு உதவி செய்யும்' என்று கதறினான். உடனே வானத்திலிருந்து ஒரு சத்தம், 'நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்' என்று கேட்டது. 'என்னைக காப்பாற்றும்' என்றான். 'நான் உன்னை காப்பாற்றுவேன் என்று நீ நினைக்கிறாயா?' என்று ஆண்டவர் கேட்டார். 'ஆம் ஆண்டவரே நான் நம்புகிறேன' என்று சொன்னான். அப்போது கர்த்தர், 'அப்படியானால் உன் இடுப்பிலிருக்கும் கயிற்றை அறுத்து விடு' என்றார். அந்த நேரத்தில் அமைதி நிலவியது. அவன் அந்த கயிற்றை இன்னும் கெட்டியாக பிடித்துக் கொண்டான். அடுத்த நாள் காலையில் அவனை பார்த்து காப்பாற்ற வந்தவர்கள் அவன் கயிற்றை கெட்டியாக பிடித்தபடியே குளிரில் உறைந்துப் போய் மரித்திருக்கக் கண்டார்கள். அவன் தரையிலிருந்து இரண்டு அடி உயரத்தில் தொங்கிக் கொண்டிருக்கக் கண்டார்கள்.


இன்று நம்மில் எத்தனைப் பேர் அவன் கயிற்றை பிடித்துக் கொணடிருந்ததைப் போல இந்த மாய உலகத்தைப பிடித்துக் கொண்டிருக்கிறோம். கர்த்தர் 'இந்த உலகத்தை விட்டுவிட்டு என்னை சார்ந்துக் கொள்' என்று அழைக்கிறார். ஆனால் நாம் அதை விடாதபடி கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறோம். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம், தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான் - 1 யோவான் 2:17. ஆம், இந்த உலகம் ஒருநாள் அழிந்துக் போகும். இதைப் பற்றிக் கொள்கிறவர்களும் நித்திய நித்ய காலமாய் எரிகிற அக்கினிநரகத்தில் எரிக்கப்படுவார்கள். உலகமாகிய கயிற்றை நம்மிடத்திலிருந்து அறுத்துவிட்டு தேவனை சார்ந்துக் கொள்வோம். நாம் தேவனை உறுதியாய் பற்றிக் கொணடோமானால், நம்மை பூரண சமாதானத்துடன் கர்த்தர் காத்துக் கொள்வார். உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர் - ஏசாயா 26:3 .


பாவத்தின் பலன் நரகம் நரகம்

ஓ பாவி நடுங்கிடாயோ

கண் காண்பதெல்லாம் அழியும் அழியும்

காணாததல்லோ நிச்சயம்



ஜெபம்:
எங்களை நேசிக்கிற எங்கள் பரம தகப்பனே, நாங்கள் உம்மையே எந்த நேரத்திலும் பற்றிக்
கொண்டிருக்கவும், உம்மையே நம்பிக் கொண்டிருக்கவும் உதவி செய்யும். உலகத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் வெறுக்க எங்களுக்கு உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.




கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail

No comments:

Post a Comment