Sunday, January 24, 2010

அனுதின மன்னா ஜனவரி 24

நன்மையான ஈவுகள்

கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும்,
தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள். - பிலிப்பியர் 2:15-16.


நாம் நம்முடைய வாழ்க்கையில் எல்லாம் நன்றாக இருப்பதால் நாம் சிலக் காரியங்களைக் குறித்து யோசிப்பதில்லை. உலகில் எல்லாருக்கும் எல்லாம் நன்றாக வாய்ப்பதில்லை. அநேகர் வேதனையின் மத்தியில் ஒவ்வொரு நாளும் கடந்து வருகிறார்கள். சிலருக்கு வேதனையே வாழ்க்கை என்று வாழ்கிறவர்களும் உண்டு. சிலருடைய வாழ்க்கையை பார்க்கும்போது தேவன் நம்மை எந்த அளவு ஆசீர்வதிததுள்ளார் என்பதை நாம் கண்கூடாக கணடிருக்கிறோம். நாம் எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும், தர்க்கிப்பில்லாமலும் செய்யும்படியாக அப்போஸ்தலனாகிய பவுல் நமக்கு ஆலோசனை கூறுகிறார். பழைய ஏற்பாட்டு காலத்தில் இஸ்ரவேலர் முறுமுறுத்து தேவனை கோபமூட்டியதுப் போல நாமும் முறுமுறுத்து தேவனை கோபமூட்டாமல் எல்லாவற்றிலும் தேவனுக்கு நன்றி செலுத்துவோம். நம்மைவிட அநேக காரியங்களில் குறைவுள்ளவர்களைக் கண்டு நம்மை ஆசீர்வதித்த தேவனுக்கு நன்றியாயிருப்போம். இன்று நீங்கள் ஒருவரிடம் கோபமாக பேசுவதற்கு முன் பேச முடியாத ஊமையான மனிதனைக் குறித்து சிந்தியுங்கள்.

இன்று உங்கள் சாப்பாட்டின் ருசியைக் குறித்து குறை சொல்வதற்கு முன் சாப்பிட ஒன்றுமே
இல்லாமல் பட்டினியாக இருப்பவரைக் குறித்து நினையுங்கள் இன்று உங்கள் கணவரைப் பற்றியோ மனைவியைப் பற்றியோ குறை சொல்வதற்கு முன் தனக்கு இன்னும் திருமணமாகவில்லையே என்று கடவுளிடம் முறையிடும் நபரைக் குறித்து சிந்தியுங்கள்.

இன்று உங்கள் வாழ்க்கையை குறித்து முறுமுறுப்பதற்கு முன் சிறு வயதிலும் வாலிப வயதிலும் மரித்து பரலோகத்திற்கு சென்றுவிட்ட ஆத்துமாக்களைப் பற்றிச் சிந்தியுங்கள்.

இன்று உங்கள் பிள்ளைகளைக் குறித்து குறைகளை சொல்வதற்கு முன் பிள்ளையை வாஞ்சித்தும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களைக் குறித்து யோசியுங்கள்.

இன்று உங்கள் வீடு அழுக்காக இருக்கிறது, சுத்தமாக வைக்கவில்லை என்று மற்றவர்களை குறை சொல்வதற்கு முன் தெருக்களில் அழுக்கில் வாழ்பவர்களைக் குறித்து யோசியுங்கள்.


இன்று இவ்வளவு தூரம் நான் காரை ஓட்டிச் செல்ல வேண்டுமே என்று முறுமுறுக்குமுன் அவ்வளவு தூரம் கால்நடையாகவே நடக்கிறவர்களை குறித்து யோசியுங்கள்.

இன்று உங்களது அதிகமான வேலையைக் குறித்து முறுமுறுக்கிறதற்க்கு முன் வேலை
இல்லாதவர்களையும், உங்கள் வேலை தனக்கு இல்லையே என்று ஏங்குகிறவர்களையும் யோசியுங்கள்.இன்று மற்றவர்களை குற்றம் சொல்வதற்கு உங்கள் விரலை அவர்கள் மேல் காட்டுவதற்கு முன் பாவம் செய்யாதவர்கள் யாரும் இந்த உலகில் இல்லை என்பதையும் நாம் எல்லாரும் கர்த்தருக்கு முன்பாக பதில் சொல்ல வேண்டும் என்பதையும் யோசியுங்கள்.

நீங்கள் வாழுகிற வாழ்க்கை கர்த்தரால் உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு பரிசு. அதை சந்தோஷமாய் கொண்டாடுங்கள், வாழுங்கள், நல்லபடியாக நிறைவேற்றுங்கள். தேவையில்லாமல் முறுமுறுத்து உங்கள் சந்தோஷத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

ஆகவே, இன்று வாழும்போதே உங்கள் அன்பை மற்றவர்களோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள். அன்பு என்பது மறைத்து வைக்கவோ, பூட்டி வைக்கவோ அல்ல, அதை மற்றவர்களுக்கு பகிர்ந்துக் கொடுக்கவே, ஆகையால் கொடுக்க வேண்டியவர்களுக்கு உங்கள் அன்பை கொடுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!


நன்மையான ஈவுகளை
தேவாதி தேவன் தந்தார்
கர்த்தர் தந்த ஆசீட் யாவும் கண்டு
நன்றியாய் சேவிப்பாயா

ஜெபம்:
இரக்கமும் மன உருக்கமுமுள்ள நல்லதகப்பனே, நாங்கள் எங்கள் குறைகளையே பெரிதாக எண்ணி முறுமுறுத்துக் கொண்டிராமல், உலகில் எத்தனைப் பேர் எங்களைவிட தாழ்நத நிலையில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து எங்களை இந்த நல்ல நிலையில் வைத்த தேவனுக்கு நன்றிகளை ஏறெடுக்கிறோம். நீர் எங்களுக்கு கொடுத்த நல்ல வாழ்க்கைக்காக நன்றி தகப்பனே. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.



கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudinamanna@gmail.com

No comments:

Post a Comment