Tuesday, January 19, 2010

அனுதின மன்னா ஜனவரி 19

அன்பாயிருங்கள்

நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள், நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும்
ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார். - யோவான். 13:34-35.



இந்த கடைசி காலங்களில் கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவின் வருகை மிக சமீபமாயிருக்கிறபடியால் எழுப்புதலை அனுப்பும் தேவா என்று விடாமல் ஜெபித்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் தேசங்களை சந்தியும் ஆண்டவரே, உம்மை அறியாத ஜனங்களுக்கு உம்மை வெளிப்படுத்தும், என்று தொடர்ந்து திறப்பின் வாசலில் நின்று ஜெபித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இன்னும் மக்கள் இயேசுவை அறியாமல் மரித்துக் கொண்டேயிருக்கிறார்கள். ஒரு பெரிய எழுப்புதல் நம் தேசத்தை இன்னும் அசைக்கவில்லை.
அறுவடைக்கு கதிர்கள் தயாராக உள்ளன. ஆனால் அதை அறுப்பதற்கு போதுமான ஆட்கள் இல்லை ஏன் இந்த நிலைமை?


நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்று இயேசுகிறிஸ்து கூறினார். ஆனால் விசுவாசிகளுக்குள்ளே இன்று அன்பு எங்கே இருக்கிறது? சபையாகிய சரீரத்திற்குள்தான் எத்தனை பிரிவினைகள்? சின்ன சின்னக் காரியங்களுக்கெல்லாம் சண்டையிட்டு, சபைகள் பிரிந்து தனியாக ஒரு சபை ஆரம்பிக்கப்படுகிறது. சத்துரு நம்மை பிரிக்கவேண்டும் என்கிற அவனது தந்திரத்தை நாம் அறியாமல் நமக்குள்ளே பிரிவினைகளை அனுமதித்துக் கெண்டு இருக்கிறோம்.


விளைநிலங்கள் அறுவடைக்கு ஆயத்தமாய் இருக்கின்றன. ஆனால் அவைகளை அறுக்க நாம்
ஆயத்தமாக இல்லையே! நாம் நம்முடைய பிரச்சனைகளயே நோக்கிக் கொண்டு இருக்கிறோம். ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டும், நான் பெரியவன், நீ பெரியவன் என்றும் போட்டியிட்டுக் கொண்டும் இருக்கிறோம். இவைகளையெல்லாம் விட்டுவிட்டு, தூசியை உதறிவிட்டு எழுந்தரிப்போமா? ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவோமா? கிறிஸ்துவின் சரீரத்தில் நாம் ஒரே அவயங்களாயிருக்கிறோமே, ஒரு அவயத்திற்கு விரோதமாய இன்னொரு அவயவம் எப்படி இருக்க முடியும்?


பிரச்சனைகளை நோக்காமல் பிசாசின் தந்திரங்களுக்கு எதிர்த்து நிற்போம். ஒன்று
சேருவோம், அழிந்துப் போகிற ஆத்துமாக்களுக்காக ஒன்றிணைந்து திறப்பின் வாசலில் நிற்போம். நாம் ஒருவரிலொருவர் அன்பாய் இருப்பதால், ஒன்றாய் இருப்பதால் சத்துருவுக்கு அங்கு இடமில்லை. சிறு வயதில் நாம் கற்ற உதாரணம் அனைவருக்கும் ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். நான்கு மாடுகள் ஒன்றுக்கூடி மேய்ந்துக் கொண்டிருந்தபோது அங்கு அவைகளை அடித்து சாப்பிட எத்தனித்த சிஙகத்திற்கு அதை நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் அந்த மாடுகள் சண்டையிட்டு தனித்தனியாக மேய்ந்துக் கொண்டிருந்தபோது, மிகவும் சுலபமாக அந்த சிங்கம் ஒவ்வொரு மாடாக அடித்து ஏப்பம் விட்டதைப் படித்திருக்கிறோம்.


இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? சங்கீதம் 133:1 என்று வேதம் சொல்கிறது. விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள் அப்போஸ்தலர் 2:44. என்று ஆதிகால கிறிஸ்தவர்களைக் குறித்து நாம் காண்கிறோம். அந்நாட்களில் விசுவாசிகள் ஒருமித்து இருந்தபடியால்தான், கர்த்தருக்கென்று ஆச்சரியமான, அற்புதமான காரியங்களை அவர்களால் செய்ய முடிந்தது. இன்று அந்த அதிசயஙகள், அற்புதங்கள் நடைபெற்று நாம் புறஜாதிகளுக்கு முன் நம் கர்த்தரே தெய்வம் என்று வெளிப்படுத்த வேண்டுமானால் ஒரு மனம் மிக மிக முக்கியம்.ஒருமனப்படும் இடத்தில் தான் கர்த்தரின் ஆவியானவர் கிரியை செய்ய முடியும். ஒருமனப்பட்டு சாத்ட்னுக்கு எதிர்த்து நிற்போம். அவன் ஓடிப் போவான். நாம் அறுப்பதற்கு, விளைநிலங்கள் தயாராக உள்ளன. உடனே வேலையை ஆரம்பிப்போமா?


விசுவாசிகள் என்னும் கூட்டம் உண்டு

அன்பு ஒன்றே அவர்கள் நடுவில் உண்டு

ஒருமனம் ஒற்றுமை அங்கு உண்டு

என்று சொல்லும் நாட்கள் இன்று வேண்டும்



ஜெபம்:
எங்களை நேசிக்கிற எங்கள் அன்பு தகப்பனே, நீர் எங்களை நேசித்து, உமது ஒரேப்போறான குமாரனை எங்களுக்காக தந்தருளினீரே, அதே அன்பை நாங்கள் எங்கள் சகோதரரிடத்தில் வெளிப்படுத்த, அவர்களை நாங்கள் நேசிக்க எங்கள் இருதயத்தில் அன்பை ஊற்றும் தகப்பனே. அறுவடைக்கு தயாராக இருக்கிற விளைநிலங்கள் நாங்கள் ஒருவரிலொருவர் அன்பாய் இருப்பதை கண்டு உம்மிடத்தில் சேர கிருபைச் செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudinamanna@gmail.com

No comments:

Post a Comment